தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தி   

      கடந்த மாதங்கள் முழுவதும் கண்ணின் மணிபோல் பாதுகாத்து, புதிய மாதத்தைக் காணச்செய்த தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் உண்டாகட்டும். நாம்  நிர்மூலமாகாதிருப்பதும் அவருடைய சுத்த கிருபையே.(புலம்பல் 3:22)

  ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் புதுப்புது கிருபைகளையும், ஆசீர்வாதங்களையும், வாக்குத்தத்தங்களையும் நம்மை படைத்த தேவனிடத்திலிருந்து எதிர்பார்ப்பது இயல்பான ஒன்றாகும். பிள்ளைகள் பெற்றோர்களிடம் தங்கள் நன்மைகளை கேட்பது போல, இதுவும் மாற்ற முடியாத ஒன்றாகும்.

    இந்த புதிய மாதத்திலும் பரலோக தேவன் என்ன காரியங்களை செய்வார் என்று காத்திருக்கும்போது, அவர் கொடுத்த வாக்குத்தத்தம்: “நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்” என்பதாகும். இந்த வாக்குத்தத்த வசனத்தை உபாகமம் 28:8-ல் வாசிக்கலாம்.

   இந்த வாக்குத்தத்தத்தின்படி, உங்கள் வாழ்க்கையிலும், ஊழியங்களிலும், தொழில்களிலும், வேலைகளிலும், படிப்பிலும் நீங்கள் கையிட்டு செய்கின்ற எல்லாவற்றிலும் பரலோக தேவன் ஆசீர்வாதங்களை கட்டளையிடுவார். நிச்சயமாகவே கட்டளையிட்டு உங்களைப் பெருகப் பண்ணுவார்.

   “கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடு வேதனையைக் கூட்டார்” என்று நீதிமொழிகள் 10:22-ல் வாசிக்கலாம். நாம் கையிடும் எல்லா வேலைகளிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருக்கும்போது அதில் எந்த வேதனையும் இருக்காது. சுலபமாகவும் ஞானமாகவும் முடிந்துவிடும். அதில் ஐசுவரியம் இருக்கும்; வருமானம் இருக்கும்; ஒரு நிறைவு காணப்படும்.

கடந்த காலங்களில் நீங்கள் ஏதோ ஒன்றை செய்திருக்கலாம் அல்லது செய்ய நினைத்திருக்கலாம்; அது முடியாமல் போயிருக்கலாம். நீங்கள் interview-க்கு சென்றிருக்கலாம்; வேலை கிடைக்காமல் போயிருக்கலாம். இன்னும் பல காரியங்களில் கிரியைகள் நடைபெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், இனி வரும் நாட்களில் அது வாய்க்கும்; காரியசித்தி உண்டாகும். அதை அந்நியக் கண்கள் அல்ல, உங்கள் கண்களே காணும். நிச்சயமாக காணும். ஏனெனில், நீங்கள் செய்யும் எல்லா வேலையிலும் பரலோக தேவன் ஆசீர்வாதத்தை கட்டளையிடப் போகிறார்.

வாக்குத்தத்தங்கள் என்பது பொதுவானவை. வாசிக்கத் தெரிந்தவர்கள் அனைவரும் இதை வாசிக்கலாம். ஆனால் வாசித்த அனைவருக்கும் இந்த ஆசீர்வாதங்கள் கிடைக்குமா என்றால், அது சந்தேகமே. அப்படி இருந்தால் இன்று அநேகர் வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்திருப்பார்கள். ஆனால் ஆவிக்குரிய உலகில் அப்படி இல்லை. அப்படியானால், யாருக்கு இந்த வாக்குத்தத்தம்? யாருடைய வாழ்க்கையில் இது நடக்கும்? யார் இதைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்? இதை கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

       சங்கீதம் 1:3-ல், “நீர்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போல் இருப்பான், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” என்று கூறுகிறது. இதில் “அவன்” என்று கூறப்படுவது யார்? கர்த்தருடைய வேதத்தில் பிரியமாக இருந்து, இரவும் பகலும் அதில் தியானமாயிருக்கிற மனுஷனையே குறிக்கிறது.

      ஆம், கர்த்தருடைய வசனத்தை வாசித்து தியானிக்கிற மனிதன் யாராயினும் பாக்கியவான் ஆவான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். ஏனெனில், அவன் வேதத்தில் பிரியமாக இருக்கும்போது அவன் கையிட்டு செய்கின்ற எல்லாவற்றிலும் தேவன் ஆசீர்வாதத்தை கட்டளையிடுவார்.

      எனவே, இன்றும் உங்கள் கையின் கிரியைகள் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றாலும், செய்கின்ற காரியங்கள் வாய்க்க வேண்டுமென்றாலும் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாக இருங்கள். அது இரவும் பகலும் உங்கள் தியானமாக இருக்கட்டும். அப்பொழுது இந்த ஆசீர்வாதங்களைச் சுதந்தரிப்பீர்கள்.

      “என்னால் பரிசுத்த வேத வசனத்தை வாசிக்க முடியவில்லை” என்று அநேகர் கூறுவதை கேட்டிருக்கிறேன். நாம் கையில் வைத்திருக்கும் வேத புத்தகத்தை சாதாரண வேதாகமம் என்று சொல்லமாட்டார்கள்; “பரிசுத்த வேதாகமம்” என்றே அழைப்பார்கள். ஏனெனில் அது மிகப் பரிசுத்தமானது.

     அதை சாதாரணமாக வாசித்தாலோ அல்லது சாதாரண நபர்கள் வாசித்தாலோ புரியாது.  தன்னைப் பரிசுத்தப்படுத்தி, பயபக்தியோடு வாசிக்க வேண்டும். துன்மார்க்கரின் ஆலோசனையில் நடக்காமல், பாவிகளின் வழியில் நிற்காமல், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமல் வேதவசனத்தை வாசிக்க வேண்டும். அப்பொழுதுதான் அது புரியும்; அந்த வார்த்தைகள் உங்களுடன் பேசும்; அதன் இரகசியம் விளங்கும்.

       இன்றைய நாட்களில் அநேகர் social media-க்கு அடிமையாக இருந்து, அதில் வரும் பரியாச வார்த்தைகளை (memes) கேட்டு ரசித்துக்கொண்டு, கடமைக்காகவே வேதத்தை வாசிக்க முயற்சிக்கின்றனர். அதனால் அவர்களால் வாசிக்க முடியவில்லை.

எனவே, வேத வசனங்களை இரவும் பகலும் தியானிக்க விரும்புகிறவர்கள் social media-வை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். நிச்சயமாகவே நீங்கள் வேதத்தை வாசிக்கிறவர்களாக மாறுவீர்கள்—அல்லது மாற்றப்படுவீர்கள்.

       இந்த மாதத்தில் நீங்கள் கையிடும் எல்லா வேலையிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் கிடைக்கவும், செய்கின்ற காரியங்கள் எல்லாம் வாய்க்கவும் தினமும் 10 அதிகாரங்கள் வாசித்து தியானிக்க ஒப்புக்கொள்ளுங்கள். அதன்படி, தினமும் 10 அதிகாரங்கள் வாசியுங்கள்; ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

இந்த செய்தி உங்களுடன் பேசி, தினமும் பத்து அதிகாரங்களை வாசிக்க உங்களை அர்ப்பணிக்கச் செய்திருந்தாலும், அல்லது வேறு எந்த ஆவிக்குரிய சந்தேகங்களும் இருந்தாலும் என்னைத் தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான ஆலோசனைகளை ஜெபித்து தருகிறேன். ஆமென்.

    

குறிப்பு : கடந்த வருடங்களைப்போல இந்த 2026-ம் வருடமும்  வேதாகமம் எழுதும் தேர்வு  நடத்தப்படுகின்றது.  இதில் கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த ஒரு வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு :30,000 ரூபாய், இரண்டாம் பரிசு : 20,000 ரூபாய், மூன்றாம் பரிசு :10,000 ரூபாய் ஆகும். இன்னும் பல பரிசுகளும் உள்ளன. ஆறுதல் பரிசும் உண்டு. மேலும் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும்.  விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வு சம்பந்தமான Update –களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள 8608833150 என்ற Whats App எண்ணை உங்கள் மொபைல் போனில் பதிந்து வைத்துக்கொள்ளவும்.     

     தீர்க்கதரிசன செய்திகள் மற்றும் வேதாகமம் எழுதும் தேர்வு சம்பந்தமான Update- கள்  இதுவரை Broadcast Method-மூலமாக ஒவ்வொருவருக்கும் தனி தனியாக Whats App  எண்ணுக்கு அனுப்பப்பட்டது. இனி இந்த முறையில் அனுப்புவதற்கு ஒரு செய்திக்கு 78 பைசா கட்டனம் செலுத்த வேண்டும் என்று Whats App நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, புதிய வருடத்தில் ஒவ்வொருவருக்கும் தனி தனியாக அனுப்பப்படமாட்டாது. மாறாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Prophetic Words என்ற Whats App Channel – ல் அனுப்பப்படும்.  அதேபோல் You tube Channel மற்றும் Telegram Channel லும் அனுப்பப்படும். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் விருப்பப்படி கீழ்கண்ட சேனலை  Subscribe செய்து கொள்ளுங்கள்.

    மேலும் Prophetic Words Whats App AI Chatbot ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகவும் மிக விரைவாக தீர்க்கதரிசன செய்திகள் மற்றும் வேதாகமம் எழுதும் தேர்வு சம்பந்தமான Update- களை பெற்றுக்கொள்ளலாம். 2026 ம் வருட தேர்வுகளை பற்றி அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்  https://www.pwmi.in/p/bible-writing-exam-2026.html

PW Whats App AI Chatbot : https://api.whatsapp.com/send?phone=918124804845&text=Hi

Whats App Channel : https://whatsapp.com/channel/0029Va5QjlcCxoAuzjZu7c3c

You tube Channel :  https://www.youtube.com/channel/UCIzTPvb01G5b-RVZvsftEJw

Telegram Channel : https://t.me/pwmin

error: Content is protected !!