×

அநீதியின் குழந்தை

       ஒரு மனிதனைக் குறித்து பரலோகம் மிகப்பெரியத் திட்டத்தினை வைத்திருக்கும் போது, அதை முறியடிக்க பிசாசு வகைத்தேடி சுற்றித்திரிவான். பல வழிகளில் தந்திரமாக முயற்சி செய்வான். அந்த மனிதனை பயங்கரமான பாவத்தில்  விழச்செய்து திரும்ப எழும்பக் கூடாதபடிக்கு தன்னுடைய கிரியைகளை நடப்பிப்பான். அப்படி என்ன பாவத்தில் விழ செய்வான்? என்னென்ன கிரியைகளை நடப்பிப்பான்? பிசாசின் தந்திரங்கள் என்னென்ன? என்பதனை இந்த தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக தியானிப்போம். ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார்.

          தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாகிய தாவீதைக் குறித்து பரலோகதேவன் மிகப்பெரிய திட்டத்தினை வைத்திருந்தார். அந்த திட்டம் என்ன? என்பதனை 2 சாமுவேல் 7 ஆம் அதிகாரத்தில் வாசிக்கலாம். இதைக் குறித்து நாத்தான் தீர்க்கதரிசி தாவீதிடம் கூறுகின்றான். இதனை தாவீதும் கேட்டான் கூடவே எதிராளியான பிசாசும் கேட்டான். தாவீதின் வாழ்க்கையில் இந்த திட்டம் நிறைவேறாமல் தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தான். தன்னுடைய தந்திரத்தினால் பிறனுடைய மனைவியோடு தாவீதை விபச்சாரம் செய்ய தூண்டினான். தாவீதும் உரியாவின் மனைவியாகிய பத்சேபாளுடன் விபச்சாரம் செய்தான். இதன் விளைவாக அவள் கர்ப்பம் தரித்தாள். அவள் வயிற்றில் ஒரு குழந்தை உருவானது. தன்னுடைய கணவனுக்கும், உறவினர்களுக்கும் தெரியாமல் தாவீது ராஜாவின் குழந்தையை தனது வயிற்றில் சுமந்தாள். இது மிகப்பெரிய பாவமாகும். இந்த பாவத்தினை மறைக்க தாவீது உரியாவை கொன்று போட்டு கொலைக்காரனாக மாறினான். இது தாவீதை வீழ்த்த பிசாசு செய்த மிகப்பெரிய தந்திரமாகும்.

      ஒரு வாலிபனுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம். அவனுடைய தகப்பனார் தேவனுக்கு ஊழியம் செய்கின்ற ஒரு ஊழியக்காரர். அந்த வாலிபனைக் குறித்து பரலோக தேவன் மிகப்பெரிய திட்டத்தினை வைத்திருந்தார். இதைத் தடுக்க எண்ணின பிசாசு அவனுடைய வாலிப வாழ்க்கையைக் கெடுத்தான். ஒரு பெண்ணோடு அவனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவள் திருமணமான பிறனுடைய மனைவி ஆவாள். அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தங்கள் சரீரங்களையும், ஆசை இச்சைகளையும் பகிர்ந்துக் கொண்டார்கள். இதன் விளைவாக அவள் கர்ப்பம் தரித்தாள். அவள் வயிற்றில் ஒரு குழந்தை உருவானது. அது யாருடைய குழந்தை என்று வேறு யாருக்கும் தெரியாது. அவளுடைய கணவன் தன்னுடைய குழந்தை என்று நினைத்துக்கொண்டான். உறவினர்களும் அப்படியே நினைத்தார்கள். தவறான தொடர்பால் ஒரு அநீதியின் குழந்தை பூமிக்கு வந்தது.

     கொஞ்ச நாட்களில் அந்த வாலிபனுக்கு திருமணம் ஆனது. நீதியாக நல்ல மனைவி கிடைத்திருக்க, அவனால் அவளோடு வாழ முடியவில்லை. தினம் தினம் குற்றமனசாட்சி அவனை வாதித்தது. அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசியில் நான்று கொண்டு செத்தான். அவன் மாத்திரமல்ல, அவனைக் குறித்த தேவனுடைய திட்டமும் அழிக்கப்பட்டது.

     இப்படித்தான் ஒரு மனிதனைக் குறித்து பரலோக தேவன் மிகப்பெரிய திட்டத்தினை வைத்திருக்க  அதை அழிப்பதற்கும், அந்த திட்டத்தினை தடுப்பதற்கும் பிசாசு பயன்படுத்தும் மிகப்பெரிய ஆயுதம் விபச்சார பாவத்தில் சிக்கவைத்து அநீதியின் குழந்தையை பெற்றெடுக்க வைப்பதாகும்.

     இன்றைய நாட்களிலும் அநேகரைக் குறித்து பரலோகதேவன் மிகப்பெரிய திட்டத்தினை வைத்துள்ளார். அதை அழிக்க அநீதியின் குழந்தை என்ற தந்திரத்தை பிசாசு பயன்படுத்துகின்றான். எனவே தேவனுடைய பிள்ளைகள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாலிப வயதில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுமுறைகளில் சிக்கிக்கொள்ளாதபடிக்கு பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக தினமும் கருத்தாக ஜெபிக்கவேண்டும்.

     அந்த வாலிப சகோதரன் தற்கொலை செய்துக்கொண்டு செத்தான். ஆனால், தாவீது அப்படிச் செய்யவில்லையே அவனுடைய வாழ்க்கையில் திட்டம் நிறைவேறியதே அது எப்படி? என்பதை நீங்கள் கேட்கலாம். அதைக் குறித்து நாம் கொஞ்சம் பார்க்கலாம்.

      தாவீது செய்த பாவத்தினை நாத்தான் தீர்க்கதரிசியை கொண்டு தேவன் உணர்த்தினார். உடனே, அவன் தன்னை நியாயப்படுத்தாமல், அதற்காக மனஸ்தாபப்பட்டு, தன்னுடைய பாவத்தினை நொறுங்குண்ட இருதயத்தோடு தேவனிடம் அறிக்கைச் செய்தான். தன் பாவத்தைக் குறித்து உணர்வடைந்து இருதயத்தில் வாதிக்கப்பட்டான். அதற்காக உபவாசித்து அழுதான். எனவே, அவன் சாகாதபடிக்கு கர்த்தர் அவன் பாவத்தினை நீங்க செய்தார். (2 சாமுவேல் 12 : 13) பின்பு, நான் இனி எந்தப் பெண்ணோடும் பாவம் செய்யமாட்டேன் என்று உறுதியாக, வைராக்கியமாக கர்த்தருக்குள் தீர்மானம் பண்ணினான். ஆம்! முதிர்வயதுவரைக்கும் அந்த வைராக்கியம் தாவீதினிடத்தில் காணப்பட்டது. சாகும் தருவாயிலும் அந்த வைராக்கியம் அவனுக்குள் இருந்தது. எனவே, பரலோகதேவன் அவன் வாழ்க்கை கெட்டுப்போகாதபடிக்கு அவனை பாதுகாத்தார். தாவீதை தன் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கர்த்தர் கண்டார்.(  அப்:13:22)

     இன்றைக்கும் ஒருவேளை இப்படிப்பட்ட பாவத்தில் நீங்கள் யாராவது சிக்கி இருக்கலாம். எப்படி நான் இந்த பாவத்திலிருந்து, குற்றமனச்சாட்சியிலிருந்து விடுதலை ஆவேன் என்று கலங்கி போய் இருக்கிறீர்களா? எதற்கும் கவலை வேண்டாம். உங்கள் பாவங்களை உணர்ந்து தேவனிடம் அறிக்கைச் செய்யுங்கள். தேவ சமூகத்திற்கு வாருங்கள். இனி இந்த பாவத்தை செய்யமாட்டேன் என்று உறுதியான தீர்மானம் எடுங்கள். உங்கள் வைராக்கியத்தை, தீர்மானத்தினை பார்க்கின்ற கர்த்தர் உங்களுக்கு கிருபையாக இரங்கி உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிப்பார். உங்கள் துக்கத்தினை சந்தோஷமாக மாற்றுவார். ஆமென்.     

Share this content:

Post Comment

error: Content is protected !!