முழுமையாக பின்பற்றுதல்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களைக் கூட தன்னோடு வைத்துக்கொண்டு அவரைப் பின்பற்ற முடியாது. அவற்றை பலிபீடத்தில் தூக்கி வைத்தால் மட்டுமே அவரை முழுமையாக பின்பற்ற முடியும். அப்போஸ்தலனாகிய பேதுருவும், அவனுடைய கூட்டாளிகளான யாக்கோபும் யோவானும் எல்லாவற்றையும் பலிபீடத்தில் வைத்து விட்டுத்தான் அவரைப் பின்பற்றினார்கள். அது எப்படி என்பதை தியானிக்கலாம்.

இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் ஒரு மீன்கூட பிடிக்காமல், அவர்கள் படகுகளை கரைக்கு கொண்டு வந்தார்கள். அதிலிருந்து இறங்கி, வருத்தத்துடன் வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள். அங்கே இரண்டு படகுகள் இருந்தன. அந்த நேரத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அங்கே நின்றார். அவரைக் கண்ட ஜனங்கள் அவரிடத்தில் வந்து, தேவவசனத்தை கேட்க அவரை நெருக்கினர்.

அப்பொழுது, அந்த இரண்டு படகுகளில் ஒன்றான சீமோன் பேதுருவின் படகில் அவர் ஏறினார். அதைச் சற்று தண்ணீருக்குள் தள்ளும்படி பேதுருவைக் கேட்டார். துக்கமும் சோர்வும் இருந்தபோதிலும், அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, பேதுரு படகை தண்ணீருக்குள் தள்ளினான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதிலிருந்து ஜனங்களுக்கு போதித்தார். திரளான ஜனங்களும், பேதுருவும், அவனுடைய கூட்டாளிகளும் அந்த போதனையை கேட்டார்கள்.

போதனையை முடித்த பின்பு, அவர் சீமோனை நோக்கி, “ஆழத்திற்குள் தள்ளிக்கொண்டு போய் வலைகளைப் போடுங்கள்” என்றார். அதற்கு பேதுரு, “இரவு முழுவதும் உழைத்தும் எதையும் பிடிக்கவில்லை” என்று தன் சூழ்நிலையைச் சொன்னான். இருப்பினும், “உம்முடைய வார்த்தையின்படி செய்கிறேன்” என்று கூறி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை படகில் வைத்துக்கொண்டு ஆழத்திற்குள் சென்று வலைகளைப் போட்டான்.

அவர்கள் வலை கிழியத்தக்க அளவுக்கு மீன்களைப் பிடித்தார்கள். ஒரு படகு போதாமல், கரையில் இருந்த மற்றொரு படகையும் அழைத்தார்கள். அந்தப் படகும் வந்து, அதுவும் நிரம்பும் அளவுக்கு மீன்கள் கிடைத்தன. இரண்டு படகுகளும் அமிழத்தக்க அளவுக்கு நிரம்பின. சாதாரணமாக இரவில் மட்டுமே மீன் பிடிக்க முடியும்; ஆனால், அவர்கள் பகலில் அற்புதமாகப் பெற்றார்கள்.

இதைக் கண்ட சீமோன் பேதுரு பிரமித்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, “நான் பாவியான மனிதன்; என்னை விட்டுப் போகும்” என்று வேண்டிக்கொண்டான். சில நேரங்களில், தேவன் செய்கிற அற்புதங்கள் கூட நம்முடைய பாவங்களை உணர்த்தி, மனந்திரும்பச் செய்கின்றன. அவனுடைய கூட்டாளிகளும் இதைக் கண்டு பிரமித்தார்கள்.

அப்பொழுது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பேதுருவை நோக்கி, “பயப்படாதே; இனிமேல் நீ மனிதரைப் பிடிக்கிறவனாக இருப்பாய்” என்றார்.

வெறுமையாக கடலுக்குள் சென்ற அந்த இரண்டு படகுகளும், நிரம்பிய நிலையில் கரைக்கு திரும்பின. கரையில் வந்தபின், அவர்கள் பிடித்த திரளான மீன்களை விற்று லாபம் பார்க்காமல், அனைத்தையும் விட்டுவிட்டு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினார்கள்.(லூக்கா 5:1-11)

இயற்கைக்கு மேற்பட்ட அற்புதங்களின் மூலம் அவர் தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அவர் யார் என்பதை அறிந்தபின், அற்புதங்களைக் கூட தங்களோடு வைத்துக்கொள்ளாமல், அவற்றை பலிபீடத்தில் வைத்தார்கள். அதன் பின்பு அவர்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவைப் பின்பற்றினார்கள்.

அற்புதங்களையும் பலிபீடத்தில் வைத்தால்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முழுமையாக பின்பற்ற முடியும்.

error: Content is protected !!