×

பரலோகத்தில் ஒரு சட்டச்சிக்கல்

ஆபிரகாமின் மேல் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போல பெருகப்பண்ணுவேன் என்ற சந்ததிப்பெருக்கத்தின் ஆசீர்வாதங்கள் இருந்தது. அவனுடைய குமாரனாகிய ஈசாக்குக்கும் இந்த ஆசீர்வாதங்கள் கடந்து வந்தன. இதன்படி ஈசாக்கின் சந்ததி பெருகியிருக்கவேண்டும். கர்ப்பத்தின் கனியை உடனே பெற்றிருக்க வேண்டும். ஆனால், இருபது ஆண்டுகள் அவனுக்கு குழந்தை இல்லை. அவனுடைய மனைவி ரெபெக்காள் ’மலடி’ என்றே அழைக்கப்பட்டாள். ஏன் இந்த முரண்பாடு? சந்ததி பெருக்கத்தின் வாக்குத்தத்தத்தையும், ஆசீர்வாதங்களையும் பெற்றவனுக்கு ஒரு குழந்தை கூட இல்லாமல் இருக்க காரணம் என்ன? இதை கொஞ்சம் வெளிப்பாட்டு வரங்களுடன் ஆராய்ந்து பார்த்தால் பரலோகத்தில் ஏற்பட்ட சட்டச்சிக்கலை பற்றி அறிந்துக்கொள்ள முடியும். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.

       உலக அரசாங்கத்தில் சில நேரங்களில் சட்டச்சிக்கல் ஏற்பட்டு அரசாங்கம் ஸ்தம்பித்து நிற்பதுண்டு. அதேபோல் பரலோக இராஜ்ஜியத்தில் சில நேரங்களில் சட்டச்சிக்கல் ஏற்படும். ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கின் வாழ்நாட்களிலும் பரலோகத்தில் ஒரு சட்டச்சிக்கல் ஏற்பட்டது. அது என்ன என்பதனையும், எப்படி ஏற்பட்டது என்பதனையும், அது எவ்வாறு சரிசெய்யப்பட்டது என்பதனையும் இந்த தீர்க்கதரிசன செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். ஜெபத்துடன் மிக கருத்தாக வாசியுங்கள். சட்டச் சிக்கலை அறிந்துக்கொள்வீர்கள்.

        பரிசுத்த வேதத்தில் சேஷ்டப்புத்திர சுதந்திரம் என்று ஒன்று உள்ளது. முதல் பிறந்தவன் சேஷ்டப்புத்திரனாக அங்கீகரித்துக்கொள்ளப்படுவான். அவனுக்கு தகப்பனுடைய ஆஸ்திகளெல்லாவற்றிலும், ஆசீர்வாதங்களிலும், வாக்குத்தத்தங்களிலும், சுதந்திரங்களிலும் இரண்டு பங்கு கொடுக்கப்படும். இது சேஷ்டப்புத்திர சுதந்திரமாகும்

           ஒருவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்து, அவன் ஒருத்தியின் மீது விருப்பமாயும் மற்றொருத்தியின் மீது வெறுப்பாயும் இருக்கும்போது, வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த குமாரன் முதற்பிறந்தவனாக இருந்தால், அவனுக்கே சேஷ்டப்புத்திர சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்றும், மாறாக விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்கு கொடுக்கக் கூடாது என்றும் நியாயப்பிரமாணம் சொல்கின்றது. இதுதான் பரலோகச் சட்டம். .(உபாகமம் 21:15-17)

       ஆபிரகாமுக்கு இஸ்மவேல், ஈசாக்கு என்று இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். இஸ்மவேல் முதல் பிறந்தவன். இவன் அடிமைப் பெண்ணாகிய ஆகாருக்கு பிறந்தான். இரண்டாவது பிறந்தவன் ஈசாக்கு. இவன் வாக்குத்தத்தத்தின்படி சாராளுக்கு பிறந்தவன். இவன் சுயாதீனமுள்ளவன்.பரலோகத் திட்டம் ஈசாக்கு முதலில் பிறக்க வேண்டும் என்பதும், அவனுக்கு சேஷ்டப் புத்திர சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும் என்பதும் ஆகும். ஆனால், ஆபிரகாம் தன் மனைவியின் பேச்சைக் கேட்டு தேவனுடைய வாக்குத்தத்தத்தினை மறந்து பாவம் செய்ததால் இஸ்மவேல் முதல் பிறந்துவிட்டான்.( ஆதியாகமம் 16)

            பரலோகச் சட்டத்தின்படி முதல் பிறந்த இஸ்மவேலுக்குதான் சேஷ்டப்புத்திர சுதந்திரம் கொடுக்க வேண்டும். தகப்பனுடைய ஆசீர்வாதங்களும் அவனுக்குக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், பரலோகத்திட்டத்தின்படி அது ஈசாக்குக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இஸ்மவேல் மாம்சத்தில் பிறந்ததால் தள்ளப்பட்டுவிட்டான். இதனால், பரலோகத்தில் சட்டச்சிக்கல் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. எதிராளியாகிய பிசாசு சேஷ்டப்புத்திரபாகம் யாருக்கு? முதல் பிறந்தவனுக்கா? இல்லை இரண்டாவது உள்ளவனுக்கா? என்று குற்றம் சாட்ட ஆரம்பித்துவிட்டான். ஈசாக்கின் பிள்ளைகளுக்கு யாருக்கு செல்கின்றது என்பதனை அறிந்துக்கொள்ள பொறுமையாக காத்திருக்க ஆரம்பித்து விட்டான்.

      ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கு பெரியவனானான். ஆனால், நாற்பது வயதில் அவனுக்கு திருமணம் நடைப்பெற்றது. இப்பொழுது அவனுக்கு பிறக்கும் பிள்ளைகளில் யாருக்கு சேஷ்டப்புத்திரபாகம் செல்கின்றது என்பதைத்தான் பிசாசு உற்றுநோக்கிக் கவனித்துக் கொண்டிருந்தான். முதல் பிறந்தவனுக்கு கொடுத்தால் அப்பொழுது இஸ்மவேலுக்கு ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழும். இரண்டாவது பிறந்தவனுக்கு கொடுக்க முடியாது. ஏனென்றால், பரலோகச்சட்டம் அனுமதிக்காது. அப்படிக் கொடுத்தால் பரலோகச்சட்டத்தினை மாற்றி எழுத வேண்டும். அப்படி மாற்றி எழுதவேண்டுமென்றால் முதலில் எழுதப்பட்ட சட்டம் கேன்சல் பண்ணப்பட வேண்டும். அதற்கு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட வேண்டும். ஆனால், அப்பொழுது, அவனுடைய நாட்களில் இயேசுகிறிஸ்துவின் பரிசுத்த இரத்தம் சிந்தப்படவில்லை. எனவே, சட்டத்தினை மாற்றுவது எளிதான காரியமல்ல.         

     இப்படிப்பட்ட ஒரு சட்டச்சிக்கல் பரலோகத்தில் காணப்பட்டது. இதனால்தான் சந்ததி பெருக்கத்தின் ஆசீர்வாதத்தினைப் பெற்ற ஈசாக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தான். ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல கிட்டத்தட்ட இருபது வருடங்களாக அவனுக்கு குழந்தையில்லை. அவனுடைய மனைவியும் மலடி என்று அழைக்கப்பெற்றாள்.

        இருபது வருடங்கள் கழித்து மலடியாக இருந்த தன் மனைவிக்காக கர்த்தரை நோக்கி ஈசாக்கு விண்ணப்பம் செய்தான். கர்த்தர் அவன் வேண்டுதலை கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள் என்று வேதவசனம் கூறுகின்றது. (ஆதியாகமம் 25:21) இருபது வருடங்களாக அவன் ஜெபிக்காமலா இருந்திருப்பான்? ரெபெக்காள்  ஜெபிக்காமல் இருந்திருப்பாள்? தினம் தினம் கர்ப்பத்தின் கனிக்காக உருக்கமாக ஜெபித்திருப்பார்கள். ஆனால், இருபது வருடங்கள் கழித்து பரலோகத்தில் ஏற்பட்ட சட்டச்சிக்கலைக் குறித்த வெளிப்பாடு அவனுக்கு கிடைத்தது. அதை பெற்றுக்கொண்டு, தன் தகப்பனாகிய ஆபிரகாம் செய்த பாவத்தை அறிக்கைச்செய்து மன்னிப்புக் கேட்டு, பாவ அறிக்கை ஜெபம் செய்தான். பரலோக தேவன் அவனுடைய விண்ணப்பத்தினை கேட்டார். ரெபெக்காள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.

      ரெபெக்காள் இப்பொழுது கர்ப்பந்தரித்துவிட்டாள். குற்றம்சாட்டுகின்ற பிசாசு யாருக்கு சேஷ்டப்புத்திரபாகம் செல்கின்றது என்பதனைப் பொறுத்து, பயங்கரமாக குற்றம்சாட்ட ஆயத்தமாக இருந்தான். இந்த சதியை அறிந்த தேவன் இரட்டைக் குழந்தைகளை கர்ப்பத்தில் கொடுத்தார். பிரசவக்காலம் பூரணமானப் பின்பு முதலில் ஏசா வெளிப்பட்டான். பின்பு அவன் குதிக்காலை பிடித்துக்கொண்டு யாக்கோபு வெளிப்பட்டான். கிட்டத்தட்ட இரண்டு பேரும் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள்தான் எனவே, யாருக்கு சேஷ்டப்புத்திரபாகம் சென்றாலும் பிசாசினால் குற்றம்சாட்ட முடியாது. ஏசாவுக்கு சென்றாலும், யாக்கோபுக்கு சென்றாலும் அவனால் எதுவும் சொல்லமுடியாது. இப்படித்தான் பிசாசினால் கொண்டு வந்த சட்டச்சிக்கல் முறியடிக்கப்பட்டது. ஈசாக்குக்கும் குழந்தைகள் கிடைத்தது. (ஆதியாகமம் 25:26)

        இதை கருத்தாக வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! பரலோக தேவன் உங்களுக்கு மிக ஆழமான சத்தியத்தை வெளிப்படுத்தி காண்பித்திருக்கின்றார். நீண்ட நெடிய நாட்களாக உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஆசீர்வாதத்தடை இருக்குமென்றால், முதலில் அதில் உள்ள பரலோக சட்டச்சிக்கலை அறிந்துக்கொள்ள கருத்தாக ஜெபியுங்கள். பரலோக தேவன் வெளிப்பாடுகளை கொடுப்பார்.  பின்பு, பரலோகச் சட்டச்சிக்கலை அறிந்துக்கொண்டு அதை உடைக்க கருத்தாக ஜெபியுங்கள் வாழ்க்கையில் ஒரு மெய்யான விடுதலை கிடைக்கும்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

Share this content:

Post Comment

error: Content is protected !!