×

ஆவிக்குரிய வஞ்சகம்

           ஆவிக்குரியக் காரியங்களை காண்பித்து ஆவிக்குரியவர்களை வஞ்சித்து பாவத்திற்கு நேராக நடத்துவது பிசாசின் மிகப்பெரிய தந்திரமாகும்.  இந்த தந்திரத்தினை யாராலும், எவராலும் எளிதாக கண்டுப்பிடிக்க முடியாது. ஆதலால், அநேக ஆவிக்குரியவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அதை விட்டு வெளியே வரக்கூடாதபடிக்கும் பிசாசினால் கட்டப்பட்டுள்ளார்கள். இந்த தீர்க்கதரிசன செய்தியில் இப்படிப்பட்டஆவிக்குரிய வஞ்சகத்தை குறித்து விரிவாக பார்க்கலாம். ஜெபத்துடன் கருத்தாக தொடர்ச்சியாக வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களோடு இடைப்படுவாராக ஆமென்.

     கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனுஷக்குமாரனாக வாழ்ந்த நாட்களில் பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்கு கொண்டுப் போகப்பட்டார். அந்த சோதனை நேரத்தில் மூன்று விதமான சோதனைகளைப் பிசாசு கொண்டு வந்தான். அதில் ஒன்றுதான் நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுப் போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று பரிசுத்த வேத வசனத்தைக் மேற்கோள்காட்டி, வசனத்தைக் கொண்டே சோதித்தான். உண்மையிலே இந்த வசனம் பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளதா? என்று ஆராய்ந்துப் பார்த்தால் சங்கீதம் 91 ஆம் அதிகாரத்தில் எழுதியிருக்கின்றது என்பது  நமக்கு தெரியவரும்.

     பரிசுத்த வேதவசனத்தைக் காட்டி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சோதித்ததுபோல் ஆவிக்குரிய காரியங்களைக் காண்பித்து ஆவிக்குரியவர்களை சோதிப்பதுதான் ஆவிக்குரிய வஞ்சகமாகும்.  இது பிசாசின்  மிகப்பெரிய தந்திரங்களில் ஒன்றாகும்.  இதை கண்டுப்பிடிப்பது எளிதல்ல. இன்றைய நாட்களிலும் தேவனுடைய பிள்ளைகள் பலர் இவ்வாறு சோதிக்கப்படுகின்றார்கள். எப்படி அவர்கள் சோதிக்கப்படுகின்றார்கள்? என்னவிதமான சோதனைகள் வருகின்றன? என்பதைக் குறித்து இந்த செய்தியில்  விளக்கமாக பார்க்கலாம்.

           தேவனுடைய பிள்ளைகள் தினமும் தேவசமூகத்திற்குள் ஜெபிப்பதற்காகவும், ஆராதிப்பதற்காகவும் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துதவற்காகவும் அடிக்கடி  செல்வார்கள். அதிக நேரம் தேவசமூகத்தில் அமர்ந்திருந்து ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபட வேண்டும் என்பது அவர்களுடைய ஆவலாக இருக்கும். இரட்சிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் இந்த ஆவலை தடை செய்வதற்கு பிசாசானவன் சிந்தனைகளைச் சிதறடிக்கச்செய்வான். கவனத்தை  திசைத்திருப்பி, பழைய தேவையில்லாத நினைவுகளைக் கொடுத்து,  அதிக நேரம் தேவசமூகத்தில் அமர்ந்திருக்கக் கூடாதபடிக்கு தடை செய்வான்.  இதனால் அவர்கள் தேவசமூகத்தில் அதிக நேரம் இருக்க முடியாமல் வெளியே வந்து விடுவார்கள். இது ஆரம்ப நாட்களில் வரும் சோதனையாகும்.

      ஆனால், ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர வளர பிசாசினால் பழைய மாதிரி சோதிக்க முடியாது. ஏனென்றால் அந்த சோதனையைக்குறித்த வெளிப்பாடுகள் கிடைத்திருக்கும். எளிதாக ஜெயம் எடுத்து விடலாம். இதைத் தெரிந்த பிசாசு ஒரு புதுமையான முறையில் ஆவிக்குரியக் காரியங்களை பயன்படுத்தி தேவசமூகத்தை விட்டு வெளியே துரத்துவான். இதைத்தான் ஆவிக்குரிய வஞ்சகம் என்று சொல்கின்றோம்.

           அதாவது ஜெபிக்க வேண்டும் என்று பாரம் இருக்கும். அதற்காக தேவசமூகத்திற்கு செல்லும் பொழுது ஜெபிக்க வேண்டாம் வேதத்தை வாசி என்று எண்ணத்தினை சிந்தனையில் மிக பலமாக கொடுப்பான். பரிசுத்த ஆவியானவர்தான் இந்த எண்ணத்தினை கொடுக்கின்றாரோ  என்று வேதத்தை வாசிக்கச் சென்றால்,  இப்பொழுது வேதத்தினை வாசிக்க வேண்டாம் ஆராதனைச் செய் என்று எண்ணத்தினை சிந்தனையில் திணிப்பான். மறுபடியும் ஆவியானவர்தான் இப்படி செய்கின்றாரோ என்று எண்ணி ஆராதிக்க சென்றிடுவோம். ஆனால், ஆராதிக்கவும் முடியாது.  இவ்வாறு அலைக்கழிக்கப்படுவதினால் என்ன நோக்கத்திற்காக தேவசமூகத்திற்கு சென்றோமோ அதை விட்டு வேறு காரியங்களை செய்து கொண்டிருப்போம். உதாரணமாக அந்த நேரத்தில் ஜெபிக்க செல்ல வேண்டும் என்பதுதான் பரிசுத்த ஆவியானவர் விருப்பம். ஆனால், ஜெபிக்காமல் வேதத்தை வாசித்துக் கொண்டிருப்போம் அல்லது ஆராதித்துக் கொண்டிருப்போம். இதனால் தேவசமூகத்திற்கு சென்ற நோக்கம் நிறைவேறாது.  பரிசுத்த ஆவியானவரும் இந்த நேரத்தில் இக்காரியங்களில் உதவி செய்ய முடியாது.  இதனால் தேவசமூகத்தில் நிறைவும், சந்தோஷமும், சமாதானமும் இருக்காது. ஜெபிக்காமல் வேதத்தை வாசிக்கிறதினிமித்தம் வேதவசனங்கள் எதுவும் புரியாது.  சில நேரங்களில் தூங்கி விழுந்து விடுவோம் அல்லது ஒன்றும் புரியவில்லை என்று வெளியே வந்து விடுவோம். கடைசியில் அந்த நாளுக்கான பரிசுத்த ஆவியானவரின் விருப்பம் நிறைவேறாமல் ஜெபம் தடைப்பட்டுவிடும். 

       இதுதான் பிசாசின் ஆவிக்குரிய வஞ்சகமாகும். இதை கண்டுப்பிடிக்கவே முடியாது. இந்த காரியங்களை நாம் ஜெயம் எடுக்க வேண்டும். தேவசமூகத்தில் வரும் இப்படிப்பட்ட அலைக்கழிப்பை கண்டுப்பிடித்து, பொறுமையாக அமர்ந்திருந்து இந்த எண்ணத்தை யார் கொடுக்கின்றார் என்பதனை ஆராய்ந்து அறியும்பொழுது எளிதாக ஜெயம் எடுக்கலாம். ஜெயம் எடுத்த பின்பு ஆசீர்வாதத்தினை பெறலாம்.

         பூமியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்கின்ற எல்லா ஊழியக்காரர்களும் தேவனால் பயன்படுத்தப்படுகின்றவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான  ஊழியத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளார்கள். நம்முடைய ஆவிக்கு ஏற்ற ஒரு ஊழியக்காரனை பரலோக தேவன் நமக்கு கொடுத்திருப்பார்.  அந்த ஊழியக்காரன் மூலமாக நமக்கு வார்த்தைகள், தீர்க்கதரிசன வெளிப்பாடுகள் எதிர்காலத்தினை குறித்த திட்டங்கள், ஆலோசனைகள், மற்றும் வழிநடத்துதல்கள் கடந்து வரும்.  அப்படி ஆவிக்குரிய இரகசியங்கள் நமக்குத் தெரிய வரும்பொழுது அதை முறியடிப்பதற்காக தேவசித்தம் இல்லாத மற்றோர் ஊழியக்காரனை பிசாசு  கொண்டு வருவான். அப்படி கொண்டுவருகின்ற ஊழியக்காரர்களும் தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்படும் ஊழியக்காரர்களாகதான் இருப்பார்கள். கள்ள ஊழியர்கள் அல்ல… உண்மையான ஊழியக்காரர்கள்தான். ஆனால் நமக்கு நியமிக்கப்பட்ட ஊழியக்காரர்கள் அல்ல.

     அப்படிப்பட்டவர்களை நம் வாழ்க்கையில் பிசாசுக் கொண்டு வரும்போது, நமக்காக பரலோக தேவனால் நியமிக்கப்பட்ட ஊழியக்காரர்கள் சொல்லுகின்ற வார்த்தைகளை அவர்கள் புரிந்து கொள்ளாமல், இது தவறு என்று நமக்கு போதிப்பார்கள் அல்லது அதற்கு எதிர்மாறான வார்த்தைகளை ஆலோசனைகளாக கூறுவார்கள்.  இதனால் நமக்கு ஒருவிதமான ஆவிக்குரிய குழப்பம் வரும். இதனால்,  உண்மையான தேவனுடைய வார்த்தையை நாம் பெற்றுக்கொள்ளக்கூடாதபடிக்குத் தடுக்கும். பரலோகத் திட்டங்களை அறிந்துக்கொள்ள  முடியாது. இதுவும் பிசாசின் தந்திரங்களில் ஒன்றாகும்.

      எனவே, தேவனுடைய பிள்ளைகள் இந்த காரியத்தில் எச்சரிக்கையாக இருந்து, நமக்காக நியமிக்கப்பட்ட பரலோக ஊழியக்காரர்கள் யார் என்பதனையும் அவர்கள் மூலமாக வரும் வார்த்தைகள் என்னென்ன என்பதனையும் தெளிவாக அறிந்துக் கொள்ள வேண்டும்.  இல்லையென்றால் தேவனிடத்தில் இருந்து கிடைக்கும் உண்மையான வார்த்தைகள் நமக்கு கிடைக்காது. மனக்குழப்பங்களும் சமாதான குலைச்சல்களும்தான் மிஞ்சும். இதுவும் ஆவிக்குரிய வஞ்சகங்களில் ஒன்றாகும்.

Share this content:

1 comment

comments user
Abraham

கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதிப்பாராக.

Post Comment

error: Content is protected !!